இன்பமடா இன்பம்!
அன்புடையான் விரலளைய
அலையுநங்கை கருங்குழல்போல்
தென்காற்றில் அசைந்தாடும்
தேமரத்தின் இலைகளினால்
இன்பமடா இன்பம் - பேர்
இன்பமடா இன்பம்!
காதலியர் காதலுரை
கழறுவது போல்மலையின்
மீதிருந்து நெளிந்துவந்து
மெலநகைக்கும் ஓடைகளால்
இன்பமடா இன்பம் - பேர்
இன்பமடா இன்பம்!
சிறுகுழவி இமையெனவே
சிரிக்குமெழில் இதழ்களிலே
நறுவண்ணம் தேக்கிவைத்து
நாற்றமளி மலர்களினால்
இன்பமடா இன்பம் - பேர்
இன்பமடா இன்பம்!
வான்விசும்பு பசும்வண்ணம்
வரப்பெற்றுப் பார்மீது
தான்வந்து தவழ்வதுபோல்
தழைக்கின்ற புல்வெளியால்
இன்பமடா இன்பம் - பேர்
இன்பமடா இன்பம்!
பெண்ணணங்கு நீள்குழலில்
பேரல்லி பூத்தாற்போல்
வெண்முகிலின் திரள்சூடி
வீற்றிருக்கும் வெற்புகளால்
இன்பமடா இன்பம் - பேர்
இன்பமடா இன்பம்!
(அரும்பு - ஆகஸ்டு 1962)


0 comments:
Post a Comment