Monday, November 16, 2009

ஏ!

wf01

இருள்பிறங்கும் அடவிநடு வேகிணற்றில் பிறந்துவளர்ந்
       திருந்தஒரு சிறிய தவளை
   இமிழ்கடலைத் தன்கிணற்றின் இயல்பினதாய் அளவினதாய்
       எண்ணியுரை செய்த செயலாய்
மருள்பிறங்கும் புல்லியஓர் மதியீனன் எலாமறிந்த
       மாமேதை என்ற நினைவில்
   மன்றங்கள் ஏறிநின்று வாய்கொழுத்து நாத்திகமே
       மட்டின்றிப் பேசி அலைந்தேன்!
அருள்பிறங்கும் மறையேத்தும் ஆண்டவனை இல்லையென்றே
       ஆர்ப்பரித்த பேதை இவனே!
   அண்டரண்டம் எல்லாமும் ஆட்டுவிக்கும் கூத்தரசே!
       ஆலமர்ந்த பரம சிவனே!

நாள்விளங்க எழுந்துவரும் ஞாயிற்றைப் பார்த்திந்த
       நாய்குரைத்த குரைப்பும் குறைவோ?
   நலம்விளங்க ஒளிபொழியும் நன்னிலவைப் பார்த்திந்த
       நரியிட்ட ஊளை குறைவோ?
கோள்விளங்க ஓங்கிநிற்கும் கொடுமுடியைப் பார்த்திந்தக்
       கூகையெள்ளி நகைத்த திலையோ?
   கோவிளங்க முகில்வளர்க்கும் குரைகடலைப் பார்த்திந்தக்
       கூன்புழுவும் சிரித்த திலையோ?
தோள்விளங்க மார்தட்டித் தொல்சமயம் இறைக்கொள்கை
       `தூ’வென்ற பேதை இவனே!
   துடிவிளங்க அண்டரண்டம் தொடர்ந்தாட்டும் கூத்தரசே!
       துகளறுக்கும் பரம சிவனே!

முற்றாத சிற்றறிவு முகிழ்க்காத பிள்ளைமனம்
       முதிராத சிறிய வயதில்
   முற்றாகப் பொய்ந்நூல்கள் முப்போதும் கற்றறிந்து
       முழுமூடன் ஆன பொழுதில்
வற்றாத உளைக்குழியாய் மனம்மாற ஆணவமும்
       வந்தேறி நின்ற தருணம்
   வரையின்றி நாத்தீக வாதங்கள் செய்துநல்லோர்
       மனம்கீண்டு மகிழ்ந்த தருணம்
பற்றாத வழிபற்றிப் பரம்பொருளைச் சிலர்மறக்கப்
       பாதைசொன்ன பேதை இவனே!
   பந்தாக அண்டரண்டம் பார்த்தாட்டும் கூத்தரசே!
       பாடகற்றும் பரம சிவனே!

அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அருஞ்சொல் விளக்கம்:

இருள்பிறங்கும் - இருள் மிகும்
அடவி - காடு
இமிழ்கடல் - ஓசை எழுப்பும் கடல், இமிழ் - ஓசை
மருள்பிறங்கும் - மயக்கம் மிகும், மருள் - மயக்கம், எது சரி, எது பிழை என அறிய இயலாமை
புல்லிய - இழிந்த, கீழான
அண்டரண்டம் - பேரண்டம், பிரபஞ்சம்
கூத்தரசு - நடராசர்
ஆலமர்ந்த - ஆலின்கீழ் அமர்ந்த, ஆல் - ஆலமரம்
கோள்விளங்க - வலிமை விளங்க, கோள் - வலிமை
கொடுமுடி - மலையுச்சி
கூகை - கோட்டான்
கோ - உலகு, நிலம், மண்
குரைகடல் - முழங்கும் கடல்
துடி - உடுக்கை
துகளறுக்கும் - குற்றத்தை நீக்கும் துகள் - குற்றம்
உளைக்குழி - சேற்றுக்குழி, உளை - சேறு
வரையின்றி - அளவின்றி, எல்லையின்றி, வரம்பின்றி, வரை - அளவு, எல்லை, வரம்பு
மனம்கீண்டு - மனம் கிழித்து, கீண்டல் - கிழித்தல்
பாடகற்றும் - கேடகற்றும், பாடு – கேடு

(தில்லித் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுமலருக்காக இவன் இயற்றிய பாடல்; முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலரில் - `சுடர்' - வெளிவந்தது.)

Read more...

Tuesday, November 10, 2009

இந்த அடி நோகாது...!

lng01

பாட்டியல் - 7 (உறுப்பியல்: 7)

சீர்கள் இணைந்து நடப்பது அடி எனப்படும்.

குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என அடி ஐந்து வகைப்படும்.

1. குறளடி: இரு சீர்கள் இணைந்து வரும்.

கொன்றை சூடி
நின்ற தேவை
அன்றி யொன்று
நன்றி லோமே.

கொன்றை சூடி - முதல் அடி; நின்ற தேவை - இரண்டாம் அடி; அன்றி யொன்று - மூன்றாம் அடி; நன்றி லோமே - நான்காம் அடி.

ஒவ்வோர் அடியிலும் இரு சீர்களே உள்ளன.

எல்லா எடுத்துக்காட்டுகளையும் இவ்வாறே கொள்க.

2. சிந்தடி: மூன்று சீர்கள் சேர்ந்து வரும்.

அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே.

3. அளவடி: நான்கு சீர்கள் தொடர்ந்து வரும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

4. நெடிலடி: ஐந்து சீர்கள் இணைந்து வரும்.

தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய ஆதரைப்போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே.

5. கழிநெடிலடி: ஆறு சீர்கள் முதலியன தொடர்ந்து வரும். சீர்களின் தொகையால் அறுசீர்க்கழிநெடிலடி, எழுசீர்க்கழிநெடிலடி என வழங்கப்பெறும்.

அறுசீர்க்கழிநெடிலடி:

இரும்புகொப் பளித்த யானை
    ஈருரி போர்த்த ஈசன்
கரும்புகொப் பளித்த இன்சொற்
    காரிகை பாக மாகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத்
    துவலைநீர் சடையி லேற்ற
அரும்புகொப் பளித்த சென்னி
    அதிகைவீ ரட்ட னாரே.

எழுசீர்க்கழிநெடிலடி:

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
    பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
    பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
    செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே. 

எண்சீர்க்கழிநெடிலடி:

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
    இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
    சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
    உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
    புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.

(குறிப்பு: கனிச்சீர், அசைச்சீர் முதலிய சீர்களையும் தளையையும் தேவை ஏற்படும்போது பார்க்கலாம்.)

 

Read more...

Friday, November 06, 2009

மலர்க்கனவு

jsp01

பனிப்பகைப் பகலோன் பாரைப்
    பார்த்திடாக் காலை; காலம்
புனைதுகில் போர்த்துத் தூங்கும்
    புற்களின் நுனியில் தூங்கும்
பனித்துளி தம்மிற் பாய்ந்து
    பனிஉடல் தோயத் தோய
நனிமகிழ் மலர ஆடி
    நலமுற நீந்தல் வேண்டும்.

சிறுபசுங் கொடிக ளாடிச்
    சீதளத் தென்ற லாடி
உறுமொரு சோலை நாடி
    உலாவரல் வேண்டும்; ஆங்கே
சிறுமுகை இதழ்அ விழ்ந்து
    திகழ்நறு மலர்கள் ஊற்றும்
நறுமது தனைய ருந்தி
    நாளெலாம் மகிழல் வேண்டும்.

மல்லிகைச் செடியின் உச்சி
    வரையதில் ஏறிச் சென்று
நல்லிளம் இலைகள் ஊடே
    நாடியோர் இலையைக் கண்டு
துள்ளியே அதனிற் சாய்ந்து
    துயரெலாங் கீழே சாய்த்து
மெல்லிளந் தென்றற் காற்றில்
    மிதந்தூசல் ஆடல் வேண்டும்.

விண்மிசை ஒளிரும் மீன்கள்
    மிதந்திவண் வந்தாற் போன்று
நுண்ணுடல் நுனியில் ஞாலம்
    நோக்கிட ஒளியை வீசும்
மின்மினி களின்மே லேறி
    மிகுந்துள இருள்து ளைத்துக்
கண்கொளும் எழில்சு வைக்கக்
    கடுகிநான் பறத்தல் வேண்டும்.

மலர்களால் தளம்அ மைத்து
    மலர்களால் சுவர்கள் நாட்டி
மலர்களால் கூரை வேய்ந்து
    மலர்களால் வாயில் செய்து
மலரென நாற்றம் தோற்றம்
    மலரென எழிலும் சேர்த்து
மலர்களால் இல்லம் செய்து
    மகிழ்ந்துநான் வாழல் வேண்டும்.     

(தமிழ்நேசன் - 11.3.1962)

Read more...

Thursday, November 05, 2009

மலரே பொன்னாக, மலரே கையாக...!

mpmk01  mpmk02

கொன்றை மரங்கள் கிளைபரப்பி வளர்ந்து நிற்கின்றன.

கிளைகளில் பொன்னிறத்தில் கொன்றை மலர்கள்; சரஞ்சரமாக அழகு பரப்புகின்றன.

அருகே காந்தள் கொடிகள்; அழகிய மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன

மெல்லத் தவழ்ந்து வருகிறது இளங்காற்று.

கொன்றை மரங்கள் மலர்களைச் சொரிகின்றன.

காந்தள் கொடிகள் தம் கைபோன்ற மலர்களால் பொன்போலும் கொன்றை மலர்களை ஏந்திக் கொள்கின்றன.

இந்தக் காட்சியைப் பார்க்கிறது ஒரு வண்டு.

இசைவாணருக்குப் பொன் ஈந்து புரக்கும் தமிழர் மரபு அந்த வண்டுக்குத் தெரியும்.

காந்தள் கொடிகள் மலர்களால் ஏந்திக்கொண்டிருக்கும் பொன்னைப் பரிசிலாகப் பெற்றுக்கொள்ள எண்ணுகிறது வண்டு.

உடனே இன்னிசை பாடத் தொடங்குகிறது.

முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய செழிப்பான அந்த நிலத்தில் வண்டின் இசை இயற்கையோடு இயைந்து ஒலிக்கிறது.

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
    விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
    நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
    புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின்
திருப்புத் தூரில்
    திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே. (6.76.3)

(மணம் மிகுந்த கொன்றை மலர்கள் பொன்னின் நிறத்தைக் காட்டுகின்றன; அருகே மலர்ந்து நிற்கும் காந்தள் மலர்கள் கைகளின் வடிவத்தைக் காட்டுகின்றன; இவற்றைக் கண்டு வண்டு இசை பாடுகிறது. `கொன்றை சொரியும் பொன்னைக் காந்தள் கையேந்தி வாங்க வண்டு இசை பாடுகிறது' எனப் பொருள்படும்.)

கடி - மணம். மருங்கே - அருகே. புனம் - மேட்டுநிலம். தென் - இசை. செழும் - செழிப்பான, வளமான. புறவு - முல்லை, குறிஞ்சி, முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய நிலம்.

திருநாவுக்கரசர் திருப்பாடலில் ஓர் இனிய காட்சி.

Read more...
உலகத்தார் உண்டென்ப(து) இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

(உலகத்தார் உண்டு என்று சொல்வதனை இல்லை என்று கூறுபவன் உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான்.)

  © Template by Ourblogtemplates.com 2008

Back to TOP