Wednesday, April 14, 2010

முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை!

tklt

ம் வாழ்நாளில் ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளைச் சமண சமயத்தவராக இருந்து கழித்தவர் திருநாவுக்கரசர் பெருமான்; அகவை ஐம்பது ஆண்டு கடந்த பின்னரே அருமைச் சைவ சமயத்துக்குத் திரும்பியவர்.

`இளமைக் காலத்தில் சிவபெருமானை வணங்காமல் வாழ்நாளை வீணாக்கிவிட்டேன்' எனத் தெளிவாகவே சொல்கிறார் அப்பர். `முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை' என்பது பெருமானாரின் வரலாற்றுக் குறிப்பு.

முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேஅடி யேனை மறவலே.
(5.57.1)

முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்னனே அடியேனை மறவலே.

`முன்னரே உன்னை நினையாது ஒழிந்தேன்; இன்னமும் உன் திருவடிகளை நான் நன்கு ஏத்தவில்லை. செந்நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே! அடியேனை மறவாதே.'

உன - உன்னுடைய
சேவடி - செம்மையான திருவடி
ஏத்திலேன் - ஏத்தவில்லை; போற்றவில்லை
திருக்கோளிலி - ஊரின் பெயர்: திருக்குவளை என வழங்கப்பெறும்
மறவலே - மறவாதே

இறைவர் திருவடிகளைப் போற்றிப் பல்லாயிரம் பாடல்கள் பாடிச் செந்தமிழால் வணங்குகிறார் அப்பர்; ஆயினும் தம் திருத்தொண்டில் பெருமானாரின் உள்ளம் நிறைவு கொள்ளவில்லை.

`இமைப்பொழுதும் நெஞ்சைவிட்டு நீங்காச் சேவடிகளை வணங்கியது போதாது; இன்னும் இன்னும் இன்னும் வணங்கவேண்டும்' என்கிறார்.

மெய்யடியார்களின் அன்பின் திறம் இது. `தேனாய் இனிய அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமானை வணங்குவதற்கு அளவில்லை' என்கிறார் அப்பர்.

பேரன்பும் பேரருளும் வாய்ந்த மெய்யடியாராக விளங்கினாலும் தம்மை மிகவும் எளியவராகவே கருதுவார் அப்பர்.

`சிவபெருமானே, உன்னை வணங்கும் மெய்யடியார்கள் பலர். யானோ மிகவும் எளியவன்; உன்னை முன்பு வணங்காது இருந்தவன்; இன்னும் செம்மையாக வணங்காதவன்; ஆயினும் அடியேனை மறந்துவிடாதே! என்னையும் நினைந்து அருள்செய்வாயாக!' எனப் பணிந்து வேண்டுகிறார்.

இறைவரை வணங்காது இருந்து, இறையருளால் உண்மை உணர்ந்து, இறைவரை வணங்கத் தொடங்கியவர்கள் இத்திருப்பாடலை நாள்தோறும் உள்ளம் உருக ஓதி வழிபடுதல் நன்று.

Read more...

Wednesday, January 20, 2010

இன்பமடா இன்பம்!

gf01

அன்புடையான் விரலளைய
     அலையுநங்கை கருங்குழல்போல்
தென்காற்றில் அசைந்தாடும்
    தேமரத்தின் இலைகளினால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

காதலியர் காதலுரை
     கழறுவது போல்மலையின்
மீதிருந்து நெளிந்துவந்து
     மெலநகைக்கும் ஓடைகளால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

சிறுகுழவி இமையெனவே
     சிரிக்குமெழில் இதழ்களிலே
நறுவண்ணம் தேக்கிவைத்து
     நாற்றமளி மலர்களினால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

வான்விசும்பு பசும்வண்ணம்
     வரப்பெற்றுப் பார்மீது
தான்வந்து தவழ்வதுபோல்
     தழைக்கின்ற புல்வெளியால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

பெண்ணணங்கு நீள்குழலில்
     பேரல்லி பூத்தாற்போல்
வெண்முகிலின் திரள்சூடி
     வீற்றிருக்கும் வெற்புகளால்
        இன்பமடா இன்பம் - பேர்
        இன்பமடா இன்பம்!

(அரும்பு - ஆகஸ்டு 1962) 

Read more...

Wednesday, January 13, 2010

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!

tvp63பத்து:

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
     போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
     திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
     படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
     ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
 

புவனி - நிலவுலகம்
அவமே - வீணே
உய்ய - கடைத்தேற
கொள்கின்றவாறு  - கொள்கின்ற ஆறு - ஆட்கொள்கின்ற இடம்; ஆறு - இடம், வழி
மலரவன் - நான்முகன்
அலர்ந்த - விரிந்த, பரந்த
அவனி - நிலவுலகம்

திருப்பெருந்துறையில்  வீற்றிருக்கும் சிவபெருமானே!

`நிலவுலகில் போய்ப் பிறவாமையினால் நாம் வீணே நாள்களைக் கழிக்கின்றோம்; இந்த நிலவுலகானது அனைவரும் கடைத்தேறுமாறு சிவபெருமான் ஆட்கொண்டு அருளும் இடம்' என்று கருதித் திருமாலாகிய அவன் விருப்பம் கொள்கின்றான். நான்முகனும் அவ்வாறே ஆசைப்படுகின்றான்.

உம்முடைய விரிந்த நிலைபேறுடைய திருவருளும் நீருமாக நிலவுலகில் எழுந்தருளிவந்து எங்களை ஆட்கொண்டருளும் வல்லவரே!

அரிய அமுதம் நிகர்த்தவரே!

திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வீராக!

திருச்சிற்றம்பலம்

Read more...

கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

tvp61ஒன்பது:

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
     விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
     வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
     கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயிர் ஆனாய்
     எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

நண்ணவும் - அணுகவும்
விழுப்பொருள் - மேலான பொருள்
உன - உன், உன்னுடைய
தொழுப்படியோங்கள் - தொழுப்பு அடியோங்கள் - தொழும்பு அடியோங்கள் – தொழும்பு - தொண்டு, அடியோங்கள் - அடியவர்களாகிய நாங்கள்: (`தொழும்பு' என்னுஞ் சொல் `தொழுப்பு' எனத் திரிந்தது.)
வண் - வண்மை, வளப்பம்
வழி - வழிவழி, பரம்பரை
களி - களிப்பு, இன்பம்
விரும்பு - விரும்பும், அன்பு செலுத்தும்
எண் - எண்ணம், உள்ளம்

விண்ணுலகில் உள்ள தேவர்களும் அணுகவும் இயலாத மேலான பொருளே!

உமக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களாகிய எங்களை மண்ணுலகில் வந்து வாழச் செய்தவரே!

வளப்பம் மிகுந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்டிருப்பவரே!

வழிவழி அடியவர்களாகிய எங்களின் கண்களிடத்தே அகலாது நின்று இன்பத்தைத் தருகின்ற தேன் போன்றவரே!

அருட்கடலில் விளைந்த அமுதம் நிகர்த்தவரே!

இனிய கரும்பு போன்றவரே!

அன்பு செலுத்தும் அடியவர்கள் உள்ளத்துள் நீங்காது இருப்பவரே!

உலகுக்கு உயிர் ஆனவரே!

எம்பெருமானே, திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வீராக!

Read more...
உலகத்தார் உண்டென்ப(து) இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

(உலகத்தார் உண்டு என்று சொல்வதனை இல்லை என்று கூறுபவன் உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான்.)

  © Template by Ourblogtemplates.com 2008

Back to TOP